15 நாள் கட்டாய தனிமைப்படுத்தல்… கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவுமா சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு?
கொரோனா பரிசோதனை செய்துகொள்பவர் மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினரும் கட்டாயம் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திண்டாடி வருகிறது என்பதை அதன் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரி நியமனம், பிறகு மண்டலத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் பிறகு அவர்களுக்கு மேல் அமைச்சர்கள் நியமனம் என்று தினமும் நியமன அறிவிப்புகள்தான் வருகின்றனவே தவிர கொரோனா குறைந்ததாக செய்திகள் வரவில்லை.
சென்னையில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் பாதிக்கு பாதி மறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதன்பிறகு ஆய்வு நடத்திய தமிழக அரசு ஆமாம் ஆமாம் எண்ணிக்கை தவறிவிட்டது… இதை மறைத்து நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்று அசடு வழிந்தது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி புதிதாக வெளியிட்ட அறிவிப்பு மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் முகாம்களில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை, உணவு, மருந்து, தண்ணீர் கூட ஒழுங்காக தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் பரிசோதனை செய்பவர்கள் மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றால் பரிசோதனை செய்ய யார் முன் வருவார்கள்? சென்னை மாநகராட்சி மக்களை பீதிக்குள்ளாகி மேலும் கொரோனா பரவலுக்கு அடிபோடுகிறதா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர். எப்படி ஊரடங்குக்குக்குள் முழு ஊரடங்கு அறிவித்து மூன்று நாளில் கொரோனா அழிந்துவிடும் என்று கூறி கொரோனா பரவலை மிகப்பெரியதாக்கினார்களோ, அதே போன்று கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு வராமல் பயந்து மற்றவர்களுக்கும் பரப்பும் நிலையை இந்த அறிவிப்பு ஏற்படுத்திவிடும் என்று அஞ்சுகின்றனர். மக்களுக்கு பீதி ஏற்படுத்தாமல் அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.