பாலியல் தொந்தரவா? பள்ளி மாணவர்கள் ரகசிய புகார் அளிக்கலாம்- சென்னை கமிஷ்னர்
பள்ளிகளில் நடைபெறும் பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளிக்க மாணவிகள் காவல்நிலையம் வரத்தேவையில்லை, ரகசிய புகார் அளித்தாலே விசாரணை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரை அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் வாகன தணிக்கையை காவல்துறை ஆணையர் சங்கர் ஜூவால் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் போது பொருட்களை கொண்டு செல்லும் நபர்களுக்கு மாநகராட்சி சார்பாக வழங்கும் பாஸ் கையில் வைத்திருக்க வேண்டும். வரும் முழு ஊரடங்கு நாட்களில் சென்னை மாநகரில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.
சென்னை மாநகரில் மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் அதிக அளவு அத்தியாவசிய தேவைகளில் பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் சாலைகளில் வாகன பெருக்கம் அதிகமாக காணப்படுகிறது. மகரிஷி வித்யா மந்திர் பள்ளி பாலியல் விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை, பள்ளிகளில் நடைபெறும் பாலியல் தொந்தரவு குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால் நேரடியாக பள்ளி மாணவிகள் இருக்கும் இடத்திற்கே சென்று ரகசிய விசாரணை நடத்தப்படும். அவர்கள் காவல் நிலையம் வரத் தேவையில்லை” எனக் கூறினார்.