ஆட்டோவில் கஞ்சா கடத்திய மூவர் கைது… 30 கிலோ கஞ்சா பறிமுதல்…

 

ஆட்டோவில் கஞ்சா கடத்திய மூவர் கைது… 30 கிலோ கஞ்சா பறிமுதல்…

சென்னை

வியாசர்பாடியில் ஆட்டோவில் கஞ்சா கடத்திவந்த 3 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை எம்.கே.பி.நகர் பகுதியில் வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில், வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் எம்.கே.பி.நகர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, வியாசர்பாடி புதுநகர் ஏ பிளாக் பகுதியில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆட்டோவில் கஞ்சா கடத்திய மூவர் கைது… 30 கிலோ கஞ்சா பறிமுதல்…

விசாரணையின்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களது வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது, ஆட்டோவில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.இதனை அடுத்து, 30 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், கஞ்சாவை கடத்தியது தொடர்பாக திருவள்ளூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (36), வியாசர்பாடியை சேர்ந்த பிரசாந்த்(28) மற்றும் மாயகிருஷ்ணன்(30) ஆகியோரை கைதுசெய்து, புழல் சிறையில் அடைத்தனர்.