தடையை மீறி விநாயகர் சிலை வைத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் : நீதிபதிகள் நம்பிக்கை
கொரோனா பாதிப்பு வேகமாக பரவிக் கொண்டே வருவதால், பல திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்றும் ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அரசு விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கவில்லை என்றால், தமிழ்நாடு முழுவதும் 1.5 லட்சம் சிலையை நிறுவி வழிபடுவோம் என இந்து முன்னணி நிர்வாகி சுப்பிரமணியம் கூறினார். அதுமட்டுமில்லாமல், தடையை மீறி சிலை வைப்போம் என்றும் கூறியிருந்தார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர் அன்பழகன் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், தடையை மீறி சிலையை வைப்போம் என அரசை மிரட்டுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்த நிலையில், தடையை மீறி விநாயகர் சிலை வைத்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.