மாணவிகளிடம் சில்மிஷம்… சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

 

மாணவிகளிடம் சில்மிஷம்… சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவசங்கர் பாபா மீது 300 பக்க அளவிலான குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா அப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. முன்னாள் மாணவிகள் 18 பேர் அளித்த புகாரின் பேரில் ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, விசாரணைக்காக அவரது பள்ளிக்கே அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது சிவசங்கர் பாபா பயன்படுத்திய பள்ளியின் இ-மெயில், பென்டிரைவ் மற்றும் சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாணவிகளிடம் சில்மிஷம்… சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

இதனிடையே, சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியைகளிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் அவர்களுக்கு சம்மன் அனுப்பினர். முதலில் வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடிய ஆசிரியைகள் அடுத்த சில நாட்களில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதனடிப்படையில், சிவசங்கர் பாபாவிடமும் அந்த ஆசிரியர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா மீது 300 பக்க அளவிலான குற்றப்பத்திரிக்கையை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். முதல் போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா மற்றும் ஆசிரியைகள் சுஷ்மிதா, பாரதி, தீபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.