ஊழியர்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணி… வைரலான வீடியோ… கொரோனா காலத்தில் சிக்கிய பெண் தாசில்தார்

 

ஊழியர்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணி… வைரலான வீடியோ… கொரோனா காலத்தில் சிக்கிய பெண் தாசில்தார்

பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதல்வரிடம் விருது வாங்கியதை கொண்டாடுவதற்காக சக ஊழியர்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணி கொடுத்த பெண் தாசில்தார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 3 மாதங்களாக பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். பலர் வேலை இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இளைஞர்கள் ஒன்று கூடி தலவாழை பிரியாணி விருந்து படைத்து, அதனை பேஸ்புக்கில் லைவ் செய்தனர். இதையடுத்து, அந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெண் தாசில்தார் ஒருவர், சக ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். கொரோனா காலத்தில் இப்படி பெண் தாசில்தார் நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாசில்தாராக செயல்பட்டு வந்தவர் ஜெயசித்ரா. பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக இவருக்கு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல்வர் பழனிசாமி சிறப்பு விருது வழங்கினார். இதையடுத்து, சக ஊழியர்களுக்கு விருந்து வைக்க தாசிர்தார் ஜெயசித்ரா முடிவு செய்தார். அதன்படி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் பிரியாணி விருந்துக்கான ஏற்பாடு நடந்துள்ளது. இந்த விருந்துக்கு பின்னதாக ஜெயசித்ராவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குன்றத்தூர் வட்டத்தில் பணியாற்றி வரும் துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் தலவாழை இலையுடன் ஆட்டுக்கறி பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

இந்த பிரியாணி விருந்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அப்போது, கொரோனா காலத்தில் விதிகளை மீறி பிரியாணி விருந்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, தாசில்தார் ஜெயசித்ராவை பணியிடம் மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசு அதிகாரி ஒருவர், அரசின் விதிகளை காற்றில் பறக்கவிட்டு ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.