பி.எம் கேர்ஸை பொது நல அறக்கட்டளையாக அறிவிக்க கோரி வழக்கு… மத்திய அரசு கடும் எதிர்ப்பு
பி.எம் கேர்ஸ் நிதியை பொது நல அறக்கட்டளையாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வாதாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை இடர்பாடுகள், பொது மக்களுக்கு உதவ பிரதமர் பொது நிவாரண நிதி என்று உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், பி.எம் கேர்ஸ் என்ற புதிய நிதியை அறிவித்தார் மோடி. இது மத்திய அரசு நிதி உதவித் திட்டமா அல்லது தனியாருடையதா என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக ஆர்.டி.ஐ-ல் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இது மத்திய அரசு நிதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு உதவி செய்ய உருவாக்கப்பட்ட பி.எம் கேர்ஸ் நிதியை பொது நல அறக்கட்டளையாக அறிவிக்க வேண்டும் என்று பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணை நடத்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அப்போது அவர், “இது போன்ற ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதே போல் பம்பாய் உயர் நீதிமன்றமும் இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.
ஆனால் இதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டர். “மனுதாரர்கள் பல்வேறு நிவாரணம் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்றனர்.