நாரதா டேப் வழக்கில் திடீர் திருப்பம்.. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்ற சி.பி.ஐ.

 

நாரதா டேப் வழக்கில் திடீர் திருப்பம்.. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்ற சி.பி.ஐ.

நாரதா டேப் வழக்கில் கைதான 4 திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை வீட்டுக்காவலில் வைக்க அனுமதிக்கும் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. திரும்ப பெற்றது.

மேற்கு வங்கத்தில் நாரதா நியூஸ் இணையதளம் கடந்த 2014ம் ஆண்டில் ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தி போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக பணம் பெற்ற காட்சிகளை வீடியோ எடுத்தது. இருப்பினும் 2016ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகத்தான் அந்த வீடியோ வெளியானது. நாரதா டேப் (வீடியோ) வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

நாரதா டேப் வழக்கில் திடீர் திருப்பம்.. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்ற சி.பி.ஐ.
சி.பி.ஐ. கைது செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள்

இந்நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பாக, மேற்கு வங்க அமைச்சர்கள் பிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா மற்றும் திரிணாமுல் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. இருப்பினும் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் அவர்களுக்கு பெயில் வழங்கியது. ஆனால் கல்கத்தா உயர் நீதிமன்றம் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் வழங்கிய பெயில் உத்தரவுக்கு தடை விதித்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாரதா டேப் வழக்கில் திடீர் திருப்பம்.. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்ற சி.பி.ஐ.
உச்ச நீதிமன்றம்

பெயில் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கைதான 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கல்கத்தா உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு சிறைக்கு பதிலாக வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் நேற்று தனது மேல்முறையீடு மனுவை சி.பி.ஐ. திரும்ப பெற்றது. முன்னதாக உச்ச நீதிமன்றம், மேற்கு வங்க முதல்வர் அல்லது மாநில சட்ட அமைச்சர் செய்வதை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? என்று சி.பி.ஐ. தரப்பு வக்கீலிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.