தந்தை, மகன் சித்திரவதை மரணம்: கோவில்பட்டி அரசு மருத்துவருக்கு சிபிஐ சம்மன்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்த போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அரசு கோரிக்கை விடுத்ததின் பேரில், சிபிஐ போலீசார் வழக்கு விசாரணையைக் கையிலெடுத்துள்ள நிலையில், முதற்கட்டமாகக் கைதான 5 காவலர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ மனுத் தாக்கல் செய்தது. அதனை விசாரித்த நீதிபதிகள் 5 காவலர்களையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தனர். அதன் படி விடிய விடியக் காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு கோவில்பட்டி அரசு மருத்துவர் வெங்கடேஷ்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.