சிபிசிஐடி பிடியில் சிக்காமல் இருக்க ஊர் ஊராக சுற்றிய காவலர் ஸ்ரீதர்.. விடிய விடிய நடந்த சேஸிங்!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளம் என்னும் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ், ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்களில் பலத்த காயம் இருந்ததும், பிறப்புறுப்பில் அவர்கள் தாக்கப்பட்டு உயிரிழந்ததும் விசாரணையில் அம்பலமானது. இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததை தொடர்ந்து காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறும் வழக்கை சிபிசிஐடி போலீசார் உடனடியாக கையிலெடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நீதி மன்ற உத்தரவின் படி, 10 குழுக்களாக பிரிந்த சிபிசிஐடி போலீசார் இந்த கொலை தொடர்பாக பல தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் 4 பேரும் நேற்றே கைது செய்யப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மட்டும் காவலர்களிடம் சிக்காமல் ஊர் ஊராக ஓடியிருக்கிறார். கடந்த 28 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்த ஸ்ரீதர், 29 ஆம் தேதி நாகர்கோவில் சென்றுள்ளார். இதனை அறிந்து கங்கைகொண்டானில் குழுமிய திருநெல்வேலி டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் ஸ்ரீதரை இன்று காலை 6.30 மணிக்கு கைது செய்துள்ளனர்.