காவிரி டெல்டா பகுதிக்கு மீண்டும் ஆபத்து; எண்ணெய் எடுப்புக்கான சுற்றுச்சூழல் கால நீட்டிப்பு அனுமதியை திரும்ப பெற வலியுறுத்தல்!

 

காவிரி டெல்டா பகுதிக்கு மீண்டும் ஆபத்து; எண்ணெய் எடுப்புக்கான சுற்றுச்சூழல் கால நீட்டிப்பு அனுமதியை திரும்ப பெற வலியுறுத்தல்!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்த நிலையில் காவிரி டெல்டா பகுதிக்கு மீண்டும் ஆபத்து என்றும், காவிரி டெல்ட்டா பகுதியில் எண்ணெய் எடுப்புக்கான சுற்றுச்சூழல் கால நீட்டிப்பு அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு பழைய திட்டத்தில் திருத்தம் செய்து, பூமிக்கடியில் அதிக வெப்பம் உள்ள ஆழமான பகுதியில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் “நீரியல் விரிசல்” முறையில் எண்ணெய் எரிவாயு எடுத்திட மேலும் 3 ஆண்டுகளுக்கு அனுமதி கொடுத்துள்ளதால் விளை நிலங்களும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிடும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில கருத்தாளர் சேதுராமன், டெல்டா பகுதியில் விளை நிலத்தில், ஏற்கனவே நிலுவையில் உள்ள 7 எண்ணெய் எரிவாயு கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி நிறைவடைய உள்ள நிலையில், 2020 வரைவு திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரிவு A விலிருந்து, சாதாரண நடைமுறையில் அனுமதி வழங்கக் கூடிய பிரிவு B க்கு மத்திய சுற்றுச்சுழல் மாற்றி திருத்தம் செய்துள்ளதால் டெல்டா பகுதிக்கு ஆபத்து என்றும் தெரிவித்தார்.

மேலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சேறும் – தண்ணீரும் கலந்த கலவைகளை மட்டுமே பயன்படுத்தும் முறையை தற்போது மத்திய அரசு மாற்றி உள்ளதால், பூமிக்கடியில் அமெரிக்க நிறுவனமான ப்ளேடு எனர்ஜி நிறுவனத்தின் ஆலோசனைப்படி அதிக வெப்பம் கொண்ட ஆழமான பகுதியில் பல அடுக்கு நீரியல் விரிசல் முறையை கொண்டு எண்ணெய் எரிவாயு எடுத்தால் நச்சுத்தன்மை ஏற்பட்டு மிகவும் மோசமான விளைவுகள் ஏற்பட்டு நிலத்தடி நீரும், விளைநிலங்களும் பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்த சேதுராமன் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கு கண்டனத்தை தெரிவித்தார்.

காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய் எடுப்புக்கான சுற்றுச்சூழல் அனுமதி நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 3 ஆண்டுகளுக்கு கால நீட்டிப்பு செய்து வழங்கிய அனுமதியை திரும்ப வேண்டும் என தெரிவித்தவர், தமிழக அரசு உடனடியாக நிலுவைத் திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.