ராமதாஸ் படம்… கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய்… பாமக முக்கிய புள்ளி அதிரடி கைது!
தமிழக தேர்தலுக்கான பிரச்சாரம் செய்யும் நாள் நேற்றோடு நிறைவடைந்தன. நேற்றே கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சியினர் வேகாத வெயிலுலும் உக்கிரமாகப் பிரச்சாரம் செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் அவரவர் தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார்கள்.
இது ஒருபுறம் இருந்தாலும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா தாறுமாறாக நடந்தது. தமிழகம் முழுவதுமே பண மழை பொழிந்தது. வாக்களிப்பதற்கு முந்தையை நாளில் பணம் கொடுத்தால் தான் மக்கள் மறக்காமல் வாக்களிப்பார்கள் என்பது அரசியல் கட்சியினரின் ஐதீகம். அதனால் மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் பணப்பட்டுவாடா செய்பவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தார்கள்.
விஷயம் என்னவென்றால் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று மேடைக்கு மேடை முழங்கும் பாஜக கட்சியினரும் பாமகவினரும் கூட இவ்விவகாரத்தில் சிக்கினர். நேற்று புதுச்சேரியிலுள்ள திருநள்ளாறில் மோடி புகைப்படத்துடன் தங்க காசும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் வைக்கப்பட்டு பட்டுவாடா செய்யப்பட்டதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இச்சூழலில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் பாமகவினர் பணப் பட்டுவாடா செய்து மாட்டிக்கொண்டுள்ளனர்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகளுடன் ராமதாஸ் புகைப்படம் பொறித்த சிறிய அட்டைகள் உள்ளிட்டவற்றை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் அதனைப் பட்டுவாடா செய்த பாமக முன்னாள் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் உட்பட மூன்று பாமகவினரைக் கைதும் செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.