புற்றுநோய் வராமல் தடுக்க செய்ய வேண்டிய 6 விஷயங்கள்!

 

புற்றுநோய் வராமல் தடுக்க செய்ய வேண்டிய 6 விஷயங்கள்!

இன்று உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைக்கு பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வியாதிகளுள் முதன்மையாக இருப்பது புற்றுநோய். மாரடைப்போ, பக்கவாதமோ சில நாட்களில் சிகிச்சை பெற்று வீடு திரும்பலாம். ஆனால், கீமோ தெரப்பி, ரேடியேஷன், அறுவைசிகிச்சை என்று பாடாய்ப் படுத்திவிடும் நோயாக புற்றுநோய் உள்ளது.

புற்றுநோய் வராமல் தடுக்க செய்ய வேண்டிய 6 விஷயங்கள்!

நான் ஒழுங்காக வொர்க்அவுட் செய்தேனே, நல்ல ஆரோக்கியமான உணவைத்தானே எடுத்தேன் எனக்கு ஏன் புற்றுநோய் வந்தது என்று கேட்பவர்கள் பலர். யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம். உடலில் முடி, நகத்தைத் தவிர எந்த ஒரு உறுப்பிலும் புற்றுநோய் வரலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும் ஆறு விஷயங்களை இங்கு காண்போம்.

1. புகையிலை

புகையிலை பழக்கம்தான் இன்று உலகில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. அதுவும் தவிர்க்கக் கூடிய புற்றுநோயாக புகையால் ஏற்படக் கூடிய புற்றுநோய் உள்ளது. சிகரெட் புகைத்தல், புகையிலை பொருட்களை சாப்பிடுவது காரணமாக வாய், தொண்டை, குரல்வளை, நுரையீரல், கணையம், கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை, சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்படலாம். புகையிலை புகைப்பதால் மட்டுமல்ல, ஒருவர் புகைத்துவிட்ட சிகரெட் புகையை சுவாசிப்பதாலும் கூட நமக்கு புற்றுநோய் வரலாம். புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்துவிட்டாலே புற்றுநோயாளிகள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துவிடும்.

2. ஆரோக்கியமான உணவு

தினமும் ஆரோக்கியமான, சரிவிகித உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கலாம். அதிக அளவில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

3. ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும்

நம்முடைய உயரத்துக்கு ஏற்ற எடை (பி.எம்.ஐ) இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உடல் எடையை சரியாக பராமரிப்பது மார்பகம், ப்ராஸ்டேட், நுரையீரல், குடல், சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

4. மாறும் சுற்றுச்சூழல்

திடீரென்று அதீத வெப்பம் உள்ள பகுதிக்கு செல்வதும் கூட புற்றுநோயை ஏற்படுத்தலாம். கதிர்வீச்சு உள்ள பகுதி, ரசாயன ஆலைகள், நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது என பல காரணங்கள் உள்ளன. இவற்றைத் தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது.

5. தடுப்பூசி எடுத்துக்கொள்வது

புற்றுநோய்களிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க மட்டுமே தடுப்பூசி உள்ளது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது ஹீயூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்றல் ஏற்படக் கூடியது. தொற்று ஏற்பட்டு அது புற்றுநோயாக மாற 10 – 12 ஆண்டுகள் ஆகும். இளம் வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி அளிப்பதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

அதே போல் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் மூலம், ஹெபடைட்டிஸ் பி வைரசால் ஏற்படக் கூடிய கல்லீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது.

6. அவ்வப்போது பரிசோதனை

சில வகையான புற்றுநோய்கள் எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளதா என்பதை எளிய ரத்த பரிசோதனை மூலமாகவே தெரிந்துகொள்ளலாம். ஆண்டுக்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்வதன் மூலம் புற்றுநோய் தொற்று இருந்தால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட முடியும். புற்றுநோய் ஸ்டேஜ் ஒன்-ல் கண்டறியப்பட்டால் அதை எளிதில் குணப்படுத்திவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!