புறநகர் ரயில்களில் பெண்களுக்காக புதிய தளர்வுகள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை புறநகர் ரயில்களில் பெண்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் ரயில் சேவை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் ரயில் சேவை போக்குவரத்து படிப்படியாக அளிக்கப்பட்டு வந்தது. மற்ற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான ரயில் சேவை ஏற்கனவே ஆரம்பமான நிலையில் புறநகர் ரயில் சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசு ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள் ,பெண்கள் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே புறநகர் ரயில் சேவையை பயன்படுத்த தெற்கு ரயில்வே அனுமதி அளித்தது, இதையடுத்து தனியார் மற்றும் ஊடகத்துறை துறையினரும் ரயிலில் பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் பெண்களுக்கு என்று நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நாளை (டிசம்பர் 13 ) முதல் புறநகர் ரயில்களில் பெண்கள் பயணம் செய்ய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அத்துடன் பெண்கள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வரலாம் என்றும் கூறியுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் மார்க்கங்களில் நாளை முதல் மின் ரயில் சேவை இயக்கப்படும் என்றும் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடித்து பயணிகள் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.