“உயிருக்கு ஆபத்தால் செய்தியாளர்களுக்கு அழைப்பு” : இயக்குநர் சீனு ராமசாமி எடுத்த அதிரடி முடிவு!
எந்த அரசியல் கட்சி குறித்தும் தான் எதிர்வினையாற்ற போவதில்லை என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சீனு ராமசாமியின் ட்விட்டர் பதிவு தற்போது பேசும் பேசும்பொருளாகியுள்ளது. 800 பட விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்ததால் தனக்கு சிலர் மிரட்டல் விடுப்பதாக சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார் .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “இது எந்த அரசியலமைப்பு இயக்கத்தைப் பற்றிய விமர்சனமோ, எதிர்வினைகளோ கிடையாது.நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நான் எல்லோருக்கும் பொதுவானவன். தமிழ் ஆர்வலர். அதனால் இது எந்த அரசியல் கட்சியும் சம்பந்தப்பட்டது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சில விஷயங்களை நான் பேச விரும்புகிறேன். நான் எடுத்த தமிழர் ஆதரவு நிலைப்பாடு பற்றிய சில தெளிவான விஷயங்களை கூறவிரும்புகிறேன். இதற்கு சிலர் எதிர்வினையாற்றி வருகின்றனர். மீண்டும் சொல்கிறேன் எந்த ஒரு அரசியல் கட்சியையும், அரசியல் கூட்டத்தையும் குறித்து நான் பேச அழைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.