வட்டி வருவாய் சிறப்பு.. ஆக்சிஸ் வங்கி லாபம் ரூ.4,118 கோடி..

 
ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி 2022 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.4,118 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி 2022 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.4,118 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 54 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஆக்சிஸ் வங்கி நிகர லாபமாக ரூ.2,677 கோடி ஈட்டியிருந்தது.

ஆக்சிஸ் வங்கி

2022  மார்ச் காலாண்டில் ஆக்சிஸ் வங்கி நிகர வட்டி வருவாயாக (வட்டி வரவுக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம்) ரூ.8,815 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 17 சதவீதம் அதிகமாகும். 2022 மார்ச் காலாண்டில் ஆக்சிஸ் வங்கியின் இதர வருவாய் 19 சதவீதம் உயர்ந்து ரூ.4,223 கோடியாக  அதிகரித்துள்ளது. 

ஆக்சிஸ் வங்கி

கடந்த மார்ச் காலாண்டில் ஆக்சிஸ் வங்கியின் மொத்த வாராக் கடன் 2.82 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 0.73 சதவீதமாகவும் குறைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, ஆக்சிஸ் வங்கி பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 6.57  சதவீதம் குறைந்து ரூ.728.70ஆக இருந்தது.