இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் கரடியின் ஆதிக்கம்... 5 தினங்களில் சென்செக்ஸ் 952 புள்ளிகள் சரிவு..

 
ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 793 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 952 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இருப்பினும் புதன் முதல் இன்று வரையிலான 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகித உயர்வு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளும்  என்ற எதிர்பார்ப்பு, இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்தது, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

பணவீக்கம்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.279.68 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 9) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.283.00  லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.4.32 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி
நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 952.35 புள்ளிகள் குறைந்து 58,840.79 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 302.50 புள்ளிகள் சரிவு கண்டு 17,530.85 புள்ளிகளில் முடிவுற்றது.