பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு.. சென்செக்ஸ் 304 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 304 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி உயர்வு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று எதிர்பாா்ப்பு, முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தது போன்ற காரணங்களால் பின்னர் பங்கு வர்த்தகம் படிப்படியாக சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.டி.சி. மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை  உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் பின்சர்வ் உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பஜாஜ் பைனான்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,696 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,777 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 153 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.281.95 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.24 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 304.18 புள்ளிகள் குறைந்து 60,353.27 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 50.80 புள்ளிகள் சரிவு கண்டு 17,992.15 புள்ளிகளில் முடிவுற்றது.