இந்த வாரம் பங்குச் சந்தைகளில் காளையின் ஆதிக்கம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 361 புள்ளிகள் அதிகரிப்பு

 
பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தது.  சென்செக்ஸ் 361 புள்ளிகள் உயர்ந்தது.

இந்த வாரம் கடந்த திங்கள் மற்றும் இன்றைய வர்த்தக தினத்தை தவிர்த்து மற்ற 3 தினங்களிலும் (செவ்வாய் முதல் வியாழன்) பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. டி.சி.எஸ்., இன்போசிஸ் மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள், கடந்த டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம், கடந்த நவம்பர் மாத தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரம், அமெரிக்க பெடரல் வங்கியின வட்டி உயர்வு நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்புகள், இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சீனாவில் கொரோனா பரவல் தீவிரம்,  உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

பணவீக்கம்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.281.17  லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 6) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.279.78  லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.39 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்
 
நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 360.81 புள்ளிகள் உயர்ந்து  60,261.18 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 97.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,956.60 புள்ளிகளில் முடிவுற்றது.