தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி.. சென்செக்ஸ் 198 புள்ளிகள் உயர்ந்தது..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 198 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.தொடர்ந்து பங்கு வர்த்தகம் மந்தகதியில் இருந்தது. இருப்பினும் இறுதியில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பவர்கிரிட் மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட  மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

என்.டி.பி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,434 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 822 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 159 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.263.97 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.86 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 198.44 புள்ளிகள் உயர்ந்து 58,664.33 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 86.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,503.35 புள்ளிகளில் முடிவுற்றது.