தொடர்ந்து 3வது நாளாக அடி வாங்கிய பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 372 புள்ளிகள் சரிவு

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

தொடர்ந்து 3வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது.  சென்செக்ஸ் 372 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சிறிய சரிவுடன் தொடங்கியது. ஆனால் உடனே பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது.  இருப்பினும் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பங்கு வர்த்தகம் படிப்படியாக இறங்கி இறுதியில் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எஸ்.பி.ஐ. மற்றும் பவர் கிரிட் உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டெக் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,040 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,287 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 135 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.269.22 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.86 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 372.32 புள்ளிகள் குறைந்து 59,636.01 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 133.85 புள்ளிகள் சரிவு கண்டு 17,764.80 புள்ளிகளில் முடிவுற்றது.