நாளை முதல் 50% பேருந்து கட்டண உயர்வு அமல்!
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமல்படுத்தும்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, கடந்த மார்ச் 24, ஏப்ரல் 14 மற்றும் மே 1 ஆம் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மே 31 ஆம் தேதிவரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா தாக்கம் இந்தியாவில் குறையாத நிலையில் தற்போது மேலும் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் 5 வது முறையாக நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்துள்ள தமிழக அரசு பொது பேருந்து போக்குவரத்தை நாளை முதல் செயல்படும் என்றும் அவை 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் (Stage Carriers) தற்போது வழக்கத்தில் உள்ள கட்டணத்துடன் கூடுதலாக 50% பேருந்து கட்டண உயர்வு நாளை முதல் அமல் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடுகட்ட தமிழக அரசு பேச்சுவார்த்தையில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக முடிவெடிக்கப்பட்டுள்ளது.