தொடரும் கொடூரம்; தென்காசி அருகே மின்சார கம்பி தாக்கியதில் இருவர் உயிரிழப்பு!
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் மின் வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் மக்காச்சோள தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை தொட்டதில் அண்ணன் தங்கை இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை எற்படுத்தியுள்ளது.
கள்ளிக்குளம் கிராமத்தில் வசிக்கும் விஜயராஜ் மற்றும் விஜயலட்சுமி ஆகிய இருவரும் விவசாயிகள். சகோதர சகோதரிகளான இருவரும், தங்களது விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணிக்கு விஜயராஜ் தோட்டத்திற்கு வந்துள்ளார். அங்கு மின்சாரக்கம்பி அறுந்து கிடந்துள்ளது.
மின்சாரக் கம்பி அறுந்துகிடந்ததை பார்க்காத விஜயராஜ், எதிர்பாராத விதமாக அதனை மிதித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி விஜயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விஜயராஜ் தோட்டத்திற்கு 7 மணிக்குச் சென்ற நிலையில், 11 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் தனது சகோதரரைத் தேடிக் கொண்டு விஜயலட்சுமி தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அபோது தோட்டத்தில் விஜயராஜ் விழுந்து கிடந்ததை பார்த்த விஜயலட்சுமி, அவரது உடலை தொட்டு எழுப்பியுள்ளார். அப்போது விஜயலட்சுமி மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதன் காரணமாக மின்சாரம் தாக்கி விஜயலட்சுமியும் பரிதாபமாக அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த குருவிக்குளம் காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.