பெண்களாக மாறிய ‘ஆண்’ இரட்டையர்கள்… “பிடிக்காத உறுப்பு நீக்கப்பட்டது” என பெருமிதம்!
ஆணாதிக்க மனோபாவத்தில் ஒருசில ஆண்கள் பாலுறுப்பை காரணம் காட்டி ‘ஆண் நெடில்’ பெருமை பேசுவார்கள். அவர்கள் எந்த உறுப்பை வைத்து பெருமிதம் கொண்டார்களோ அதே உறுப்பை வேண்டாமென நீக்கி திருநங்கைகள் அவதரிப்பார்கள். அந்தவரிசையில் உலகிலேயே முதல் முறையாக இரட்டையர்களான ஆண்கள் இருவர் தங்களது பாலுறுப்பை நீக்கி பெண்களாக மாறியிருக்கின்றனர். தங்களால் அருவருப்பாகப் பார்க்கப்பட்ட ஆணின் பாலுறுப்பு நீக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பெருமிதம் கொள்கின்றனர்.
2002ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள டபிரா கிராமத்தில் சோபியா அல்புர்க், மைலா ரெசன்டே எனும் இரட்டையர்கள் பிறந்தனர். பிறப்பில் இவர்கள் ஆணாக இருந்தாலும், வயது செல்ல செல்ல தங்களுக்குள் பெண் தன்மை வெளிப்படுவதை உணர்ந்திருக்கின்றனர். அதனைத் தங்களது வீட்டாரிடம் கூறியதையடுத்து, அவர்களும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களின் விருப்பம் போல் செயல்பட அனுமதித்திருக்கின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் தங்களிடம் இருந்த ஆணின் பாலுறுப்பு அவர்களுக்குள் ஒருவித அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதனை நீக்க முடிவுசெய்துள்ளனர். ஆரம்பத்தில் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நிதியுதவி செய்ய அவர்கள் தயாராகவும் இல்லை. இச்சமயத்தில் அவர்களுடைய தாத்தா ஆதரவு தெரிவித்திருக்கிறார். பணத்திற்காக அவரது சொத்தையும் விற்று 15 லட்சம் பணம் புரட்டி கொடுத்திருக்கிறார். அப்பணத்தைக் கொண்டு இருவரும் ஒரே நேரத்தில் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு பெண்ணாக மாறியுள்ளனர். சுமார் 5 மணி நேரத்திற்குப் பிறகு அருவருப்பான அந்த உறுப்பை நீக்கிய வலி ஒருபுறம் இருந்தாலும், பிடிக்காத ஒன்றை நீக்கியது மகிழ்ச்சி தருவதாகக் கூறியுள்ளனர்.