மதுரை
மதுரையில் வைகை ஆற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மகபூப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஷாஜகான். இவரது மகன்கள் அசாரூதீன்(15) மற்றும் சிக்கந்தர் (13). சகோதர்கள் இருவரும் நேற்று மதியம் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்கு குளிக்க சென்றனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற சிக்கந்தர் நீரில் மூழ்கி மாயமாகினார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அசாருதீன் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அந்த பகுதி இளைஞர்கள் நீரில் இறங்கி தேடியும், சிறுவனை மீட்க முடியவில்லை. பின்னர், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் சுமார் ஒரு மணி நேர தேடலுக்கு பின், சிக்கந்தரை சடலமாக மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு போலீசார், சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.