‘இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை.. வதந்தியை நம்ப வேண்டாம்’ – பிரதமர் மோடி பேச்சு!

 

‘இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை.. வதந்தியை நம்ப வேண்டாம்’  – பிரதமர் மோடி பேச்சு!

நாடு முழுவதும் 3,000 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடி, காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார்.

அதன் பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி, ‘நாட்டு மக்களின் நலனுக்கு உழைக்கும் முன்களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். ராணுவ வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும். விஞ்ஞானிகள் உழைப்பால் குறைந்த காலத்தில் இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் நமக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்திருக்கிறது. குறைந்த நேரத்தில் தடுப்பூசியை உருவாக்கியிருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்துகிறது’ என்று கூறினார்.

‘இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை.. வதந்தியை நம்ப வேண்டாம்’  – பிரதமர் மோடி பேச்சு!

தொடர்ந்து, தடுப்பூசியை கண்டுபிடிக்க பாடுபட்ட விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்த பிரதமர், ‘மனிதகுலம் ஒன்றை நினைத்து விட்டால் அதனை சாதிப்பது இயலாத காரியமல்ல. இந்தியாவில் தயாராகும் தடுப்புசி தான் உலகிலேயே விலை குறைவானது. இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை வதந்திகளை நம்ப வேண்டாம். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் தொடர்கிறது. நம் நாட்டில் உருவாகும் தடுப்பூசி எந்த வகையிலும் தரம் குறைந்தவை அல்ல’ என்று கூறினார்.

மேலும், மக்களுக்கு செலுத்தப்படும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்கும் என்றும் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்ட உடன் மாஸ்க்கை நீக்கி விட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.