திருச்சியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு குப்பை தொட்டியில் வீச்சு!

 

திருச்சியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு குப்பை தொட்டியில் வீச்சு!

திருச்சி

திருச்சியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசுவை, மர்மநபர்கள் குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மேல சிந்தாமணியில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில், நேற்று காலை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குப்பை தொட்டியின் அருகே பச்சிளம் குழந்தையின் அழு குரல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசு துணி சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.

திருச்சியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு குப்பை தொட்டியில் வீச்சு!

இதனை அடுத்து, குழந்தையை மீட்ட தொழிலாளர்கள், இதுகுறித்து திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு தெப்பக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக குழந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை வீசி சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.