ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் போனஸ்… மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், பீகார் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் படி, பீகார் மாநிலத்தில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. பள்ளிகள், கல்லூரி என அனைத்தும் மூடப்படும். தியேட்டர்கள், மால்கள், ஜிம்கள், கோவில்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும். இறுதி சடங்கு மற்றும் திருமண விழாக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளான காய்கறி, பழங்கள் உள்ளிட்ட கடைகள் மட்டும் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் முக்கியமானதாக பார்க்கப்பட வேண்டியது, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்பது தான். அவர்களின் சேவையை பாராட்டும் விதமாக ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டுமென முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது மக்களுக்காக உழைக்கும் சுகாதாரத்துறையினருக்காக அரசு இந்த அசத்தல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் போதும் பீகாரில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.