திருச்செந்தூர் அருகே 7 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு! அதிர்ச்சி தகவல்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது கல்வலை கிராமம். இந்தக் கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள காட்டுப் பகுதியில் 7 வயதுள்ள ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத சிலர் ஒரு டிரம்மில் சிறுமியைத் தூக்கி வந்து போட்டதாக அந்தப் பகுதி மக்கள் சொல்கின்றாராம். சிறுமியின் உடல் அங்கிருந்த ஓடையின் ஓரத்தில் கிடந்திருக்கிறது.
அந்தச் சிறுமியின் உடல் மதியம் 1 மணியளவில் அங்கு கிடப்பது காவல் துறையினருக்குத் தெரியவந்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் உடலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அந்தச் சிறுமி ஏன் கொலை செய்யப்பட்டார்… பாலியல் வன்முறைகள் அவர் மீது நடத்தப்பட்டதா என்பதெல்லாம் இனிதான் தெரியவரும். சிறுமி கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவத்தில் இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருகிறார்கள். இந்தக் கொலை தொடர்பாக காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
சமீபமாக சிறுமிகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகளவில் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றங்களும் பெரும்பாலும் அந்தச் சிறுமிக்கு தெரிந்த நபர்களால்தான் நடத்தப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் நெருங்கிய உறவினர்கள் மூலமே நடக்கின்றன என்பதே பெரும் கேவலமான செய்தி. இம்மாதிரியான வன்முறை சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசும் காவல் துறையும் மட்டுமல்ல சமூக அக்கறையுள்ளவர்களும் இணைந்து களப்பணியாற்ற வேண்டியது அவசியம்.