புதுச்சேரி முதல்வருக்கு எதிராக பாஜகவினர் தேங்காய் உடைத்து போராட்டம்
Oct 10, 2020, 15:36 IST1602324395000
புதுச்சேரியை, தமிழகத்துடன் இணைக்க முயற்சிப்பதாக பாஜக மீது முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியதை கண்டித்து, அம்மாநில பாஜகவினர் கோயிலில் தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் நாராயணசாமி இன்று காரைக்காலுக்கு சென்றார். அப்போது, முதலமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாதாகோவில் வீதியில் உள்ள விநாயகர் கோயில் முன்பு
பாஜகவினர் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து முதலமைச்சர் நாராயணசாமிக்கு விநாயகர் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் புதுச்சேரியில் கண்டன பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.