புதுச்சேரியில் முதல் முறையாக அரியணை ஏறும் பாஜக!
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. அதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்றது. ஆறில் சுயேச்சையும் எட்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணியும் வென்றன. பெரும்பான்மை பாஜக கூட்டணிக்கே இருந்ததால் முதலமைச்சராக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
யார் யார் அமைச்சர்கள் என்று முடிவு செய்யப்படாததால் ஆளுநரே அனைத்துப் பணிகளையும் கவனித்து வந்தார். குணமடைந்து வந்த பின்னும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் சபாநாயகர் பதவியும் 2 அமைச்சர்கள் பதவியும் பாஜகவிற்கு வழங்க சம்மதம் தெரிவித்தார் ரங்கசாமி. முடிவு எட்டப்பட்டதால் தற்போது பதவியேற்பு பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இதனிடையே 3 நியமன எம்எல்ஏக்களாக பாஜகவைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இது ஆரம்பத்தில் சர்ச்சையானாலும் சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செல்லும் என தீர்ப்பளித்தது. இதனால் ஒட்டுமொத்தமாக 22 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. தற்போது சபாநாயகர் தேர்வு நடத்தப்படவுள்ளது. நாளை மறுநாள் நடைபெறவுள்ள சபாநாயகர் தேர்தலில் பாஜக சார்பில் எம்எல்ஏ செல்வம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் தான் சபாநாயகர் என்பது உறுதியாகிவிட்டது. புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராவது இதுவே முதல் முறை.