பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் பாதுகாவலருக்கு கொரோனா உறுதி

 

பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் பாதுகாவலருக்கு கொரோனா உறுதி

ஹைதராபாத்: தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் பாதுகாவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தெலங்கானாவில் உள்ள கோஷமஹால் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது பெயர் பலராம் ஆகும். அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ ராஜா சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அடுத்த இரண்டு நாட்களில் அவர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகும். தங்கள் பாதுகாவலருக்கு கொரோனா இருப்பதை எம்.எல்.ஏ ராஜா சிங் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். மேலும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கொரோனாவை தோற்கடிப்பதற்கு உண்டான நோயெதிர்ப்பு சக்தியை பெற முடியும் என்று தனது உடற்பயிற்சி வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.