தாராபுரத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு!

 

தாராபுரத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு!

திருப்பூர்

தாராபுரத்தில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட எல்.முருகன் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரபபு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, திமுக சார்பில் கயல்விழி போட்டியிட்ட நிலையில், அவர் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், தேர்தலில் தங்களது கூட்டணிக்கு வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து, நகர அதிமுக சார்பில் தாராபுரம் அண்ணா சிலை அருகே பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பேனரில் உள்ள பாஜக தலைவர் எல்.முருகன் முகத்தை மர்ம நபர்கள் சிலர் கிழித்து சேதப்படுத்தி சென்றனர்.

தாராபுரத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு!

இதுகுறித்து, தகவல் அறிந்த 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், அந்த கட்சியின் நகர செயலாளர் காமராஜ் தலைமையில் அண்ணா சிலை பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிமுகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, பேனர் கிழிப்பில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதிமொழி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அதிமுகவினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.