“12th fail ஆகிட்டோம்னு வருசா வருசம்தான் சில மாணவர்கள் சாகுறாங்க” : நடிகர் சூர்யாவுக்கு அண்ணாமலை பதிலடி?!
நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் கருத்து தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் போராட்டம் நடத்திய போதும் மத்திய அரசின் திட்டப்படி நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. ஆனால் அதே சமயம் நீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் 4 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதற்கு நடிகர் சூர்யா கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். அதில், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மக்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்என்று ஆவேசமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை பெயரில் வெளியான ட்வீட்டில் “12th fail ஆகிட்டோம்னு வருசா வருசம்தான் சில மனவலிமை குறைந்த மாணவர்கள் சாகுறாங்க. எதுக்கு 12th வச்சுருக்கீங்க? அது போலதான் #NEET entrance. இந்தியா முழுவதும் தமிழ் மாணவர்களுக்கு கிடைக்ககூடிய மருத்துவ படிப்பை பெறுவதற்கான வாய்ப்பாக பாருங்கள்” என்று பதிவிடப்பட்டிருந்தது. ஆனால் இது உண்மையில் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலையின் ட்விட்டர் பக்கம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழக பாஜக துணை தலைவராக பொறுப்பேற்றுள்ள அவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல்பட்டு வருவதாக பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.