’வரலாற்றிலேயே நிகழாத வன்முறை’ ட்ரம்ப் பிடிவாதத்தால் போர்களமாகும் அமெரிக்கா
உலகமே அமெரிக்காவில் நடைபெறும் சம்பவங்களை அதிர்ச்சியோடு கவனித்து வருகிறது. இதுபோல அமெரிக்க வரலாற்றில் நடந்ததே இல்லையே என்று கவலையொடு கருத்துகளைத் தெரிவித்து வருகிறது. அங்கே என்னதான் நடக்கிறது?
ஆனால், ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த ட்ரம்ப், ‘இந்த அமெரிக்க தேர்தலில் எனக்குத்தான் அதிகமான ஓட்டுகள் கிடைத்தன. அப்பறம் எப்படி ஜோ பைடன் அதிபராகிறார்? அவர் சட்டத்திற்குப் புறம்பாகவே அதிபராகிறார்” என்று ஆரம்பித்த இடத்திற்கு வந்து நிற்கிறார்.
ஜோ பைடன் சட்டப்படி இம்மாத இறுதியில் அதிபராகப் பதவி ஏற்க உள்ளார். அதற்காக அமெரிக்க தேர்தல் சபை உறுப்பினர்கள் நேற்று கூடி வாக்களித்து அதிபரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். அதற்கான வாக்கெடுப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கேப்பிடல் கட்டிடத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
ஆயுதங்களோடு வந்த ட்ரம்ப் ஆதரவாளர்களைப் பார்த்த செனட் உறுப்பினர்கள் அச்சத்தோடு தப்பி ஓடினார்கள். இந்த வாக்கெடுப்பை முன்னெடுக்கும் அவைத் தலைவர் அறையிலும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து பொருட்களை உடைப்பதும், அவை தலைவர் நாற்காலியில் உட்காந்துகொள்வதுமாக செய்தனர்.
இதனால், காவல் துறையினர் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பத்திரமாக வெளியேற்றினர். ஆனாலும், ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெறி தீர வில்லை. வன்முறையில் ஈடுபட்டனர். அதில் 4 பேர் பலியானார்கள். அந்தப் பகுதியே ட்ரம்ப் ஆதரவாளர்களின் கைவசமானது. அதை மீட்க காவல் துறையினர் கடும் போராட்டத்தை மேற்கொண்டனர். சில மணி நேரத்தில் மீண்டும் காவல் படை வசமானது அப்பகுதி.
ட்ரம்ப் தனது ஆதரவாளர்களை அமைதியாகச் சொல்லும் வீடியோகூட பெயரளவில்தான் இருந்தது. ஏனெனில், அதிலும் தேர்தல் நடந்த முறை குறித்து ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதனால், அவரின் சமூக ஊடக பக்கங்கள் மூடப்பட்டன.
ட்ரம்பின் இந்தச் செயலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ட்ரம்ப் அங்கம் வகிக்கும் குடியரசு கட்சியின் தலைவர்களே ட்ரம்ப் செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் அவரை அதிபர் பதவியிலிருந்து நீக்கும் முடிவுக்கு அமெரிக்காவின் துணை அதிபர் வரக்கூடும் என்றே தெரிகிறது. அதுவும் இன்றே நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.