வரும் 17ல் பவானி, கொடுமுடி கோவில்கள், ஆற்றங்கரையோர பகுதிகளில் திதி, தர்ப்பணம் செய்ய தடை
பவானி, கொடுமுடி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்கள், கரையோரப்பகுதிகள் மற்றும் முக்கிய புண்ணிய தலங்களில் 17.09.2020 அன்று
புரட்டாசி மகாளய அமாவாசை நாளில் திதி, தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீறி அப்பகுதிகளுக்கு செல்பவர்கள் மீதும், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தெரிவித்துள்ளதாவது: ‘’ஈரோடு மாவட்டத்தில் ஆற்றின் கரையோர பகுதிகளில் குறிப்பாக பவானி கூடுதுறை
மற்றும் கொடுமுடி ஆகிய பகுதிகளில் கோவில்கள் மற்றும் முக்கிய புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் ஆண்டுதோறும் மகாளய அமாவாசை தினத்தன்று ஈரோடு மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்கள் மற்றும் உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம், பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது மற்றும் புனித நீராடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்றின் பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. ஒரே இடத்தில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் நோய் தொற்று அதிகம் பரவும் அபாயம் இருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி 17.09.2020 மகாளய அமாவாசை நாளில் பொதுமக்கள் யாரும் பவானி கூடுதுறையில் உள்ள அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் மற்றும் கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் ஆகிய கோயில்கள், ஆற்றின் கரையோர பகுதிகளில் மக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி அனுமதிப்பட்ட குறைந்த அளவு பக்தர்கள் திருக்கோயில்களில் சாமி தரிசனம் செய்யலாம்.
எனவே தடை உத்தரவை மீறி யாரேனும் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீதும், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.’’