ஜியோவை பின்னுக்கு தள்ளிய ஏர்டெல்… தொடரும் வோடாபோன் ஐடியாவின் பரிதாபம்
ஏர்டெல் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிதாக 29 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது
நம் நாட்டில் தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் தற்போது ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றன. முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் இறங்கிய பிறகு இந்த துறையின் முகமே மாறி விட்டது. இலவச கால்கள், குறைந்த கட்டணத்தில் டேட்டா உள்ளிட்டவை ஜியோவின் வருகைக்கு பிறகுதான் நடந்தது.
தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களின் இணைப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடந்த ஆகஸ்ட் மாத இணைப்புகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அந்த புள்ளிவிவரத்தின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனம் அதிகபட்சமாக 29 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது.
அதேசமயம் நாட்டிலேயே அதிக மொபைல் இணைப்புகளை கொண்ட ஜியோ நிறுவனம் அந்த மாதத்தில் 18 லட்சம் இணைப்புகளை மட்டுமே வழங்கியுள்ளது. வோடாபோன் ஐடியா நிறுவனம் அந்த மாதத்தில் 12.3 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி, 40.27 கோடி மொபைல் சந்தாதாரர்களுடன் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனம் 32.28 கோடி இணைப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. வோடாபோன் ஐடியா 30.01 கோடி வாடிக்கையாளர்களுடன் 3வது இடத்தில் உள்ளது.