பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகன் காலமானார்!

 

பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகன் காலமானார்!

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும், முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான, தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி, இன்று பிற்பகலில் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 92. இந்தத் தகவலை மன்னன் மகனும், பாரதிதாசன் அறக்கட்டளைத்தலைவருமான கவிஞர் கோ.பாரதி தெரிவித்தார்.

பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகன் காலமானார்!
கோபதி புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றி, கிட்டத்தட்ட 50 நூல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். புதுவை தமிழ்ச் சங்கத்தில் தலைவராகவும் பல ஆண்டுகள் பொறுப்பிலிருந்து, அதற்கு சொந்தக் கட்டடமும் கட்டிக்கொடுத்தார். தமிழக அரசின் திருவிக விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளரும், கவிஞருமான இவர், பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டார். இவர் மனைவி சாவித்ரி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இவருக்கு தென்னவம், கவிஞர் பாரதி ஆகிய இரு மகன்களும், அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர். புதுச்சேரியில் நாளை மாலை 4 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.