‘கடிவாளம் இல்லாமல் வரம்பு மீறி பேசுகிறார்’.. மீரா மிதுனுக்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம்!
தமிழில் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீராமிதுன். பிக்பாஸ் வீட்டுக்குள்ளே சேரன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறும்படம் மூலம் அசிங்கப்பட்ட வெளியேறினார். அவ்வப்போது கவர்ச்சிப் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு முகம் சுழிக்க வைத்துவந்த மீரா, அண்மைகாலமாக டிவிட்டரில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீரா மிதுன் நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவையும் கடுமையாக விமர்சித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் வரம்பு மீறி தகாத வார்த்தைகளில் பேசியிருந்தார். மீரா மிதுன் இவ்வாறு பேசியது விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியது. மேலும், இணைய தளத்தில் மீரா மிதுனை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை மீரா மிதுன் விமர்சித்தது தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அடுத்தவரை தூத்தி கோட்டை கட்டாதீர்கள் அது வெறும் மண் கோட்டையாகத் தான் இருக்கும் என்றும் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா குடும்பத்தை மீரா மிதுன் இகழ்ந்து பேசுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல கடிவாளம் போடாமல் வரம்பு மீறி மீரா மிதுன் பேசுவதாகவும் சகக்கலைஞர்களின் குடும்பங்களை அவதூறாக பேசியும் எந்த சங்கமும் நீதிக்குரல் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Statement for regarding the Recent issues of Actor #Vijay & #Suriya pic.twitter.com/DgWHPOKhSi
— Bharathiraja (@offBharathiraja) August 10, 2020