அகந்தையை ஒழிக்கும் பாகவதம்!

 

அகந்தையை ஒழிக்கும் பாகவதம்!

‘நான்’ என்னும் அகந்தையை ஒழித்து எல்லோரும் கடவுளின் குழந்தைகள் என்று சொல்ல வைப்பதே ஸ்ரீமத் பாகவதத்தின் லட்சியமாகும். பகவான் கிருஷ்ணரின் லீலைகளை சொல்லும் புராண இலக்கியம் பாகவதமாகும். வடமொழிய வியாசர் எழுதிய பாகவதம் என்னும் நூல் திருமாலின் ஆறு அவதாரங்களையும் 25 கீதைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு 36,000 ஸ்லோகங்களாக எழுதப்பட்டுள்ளது. கந்தபுராணம் முருகனின் அவதாரங்கள் குறித்துப் பாடியது போல, திருமாலின் அவதாரங்களான கண்ணன், கிருஷ்ணர், ராமன் குறித்துப் பாடவேண்டும் என்னும் விருப்பத்தில், அருளாளதாசர் 130 சருக்கங்களில் 9147 பாடல்களால், 16ஆம் நூற்றாண்டில் தமிழில் மொழிமாற்றம் செய்து பாடியுள்ளார்.

அகந்தையை ஒழிக்கும் பாகவதம்!

பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே பாகவதம் படிக்க முடியும் என்று பத்ம புராணத்தில் ஒரு தகவல் உண்டு. மனோபலம், அமைதி, தீய எண்ணங்களில் இருந்து விடுபட பெருமாளுக்கு உகந்த நாளான இன்று பாகவதத்தை படித்து நற் சிந்தனைகளை அடையலாம்.

`ஸ்ரீமத்பாகவதம் சாஸ்த்ரம் கலெள கீரேண பாஷிதம்
ஏதஸ்மாத் அபரம் கிஞ்சித் மனச்சுத்யை ந வித்யதே
ஜன்மான்தரே பவேத் புண்யம் ததா பாகவதம் லபேத்’

என்கிற ஸ்லோகம் பத்ம புராணத்தில் வருகிறது. அதாவது, பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே பாகவதம் படிக்க முடியும். உள்ளத்தூய்மை அளிக்கக்கூடிய மாமருந்து இதைவிட வேறொன்றும் இல்லை இவ்வாறு ஸ்ரீபாகவதத்தின் பெருமை சிறப்பாக சொல்லப்படுகிறது.

அகந்தையை ஒழிக்கும் பாகவதம்!

வேதவியாச மகரிஷி, பகவான் நாராயணரின் சரிதத்தை மிகச் சிறப்பாக விவரித்துள்ளார்.

‘க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்’ என்றபடி ஜீவாத்மாக்களான பசுக்களை மேய்த்து நல்வழி காட்டும் கிருஷ்ணனாக, கோபாலனாக அவதரித்த பகவானின் லீலைகளை படிக்கும்போதும் கேட்கும்போதும் நம் மனதிலுள்ள தீய எண்ணங்கள் விலகி, நல்வழியில் பயணிப்போம் என்று நம் முன்னோர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

‘ஸர்வ வேத ஹிதிஹாஸானாம் ஸாரம்’ என்று பாகவதத்திலேயே அனைத்து வேதங்களின் ஸாரமாக பாகவதம் அறியப்பட வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

‘நான்’ எனும் அகந்தையை போக்கி , `எல்லோரும் கடவுளின் குழந்தைகள்’ என்ற எண்ணம் மேலோங்க, ஒற்றுமையாகவும் ஒழுக்கமாகவும் நம்மை வாழவைப்பதே ஸ்ரீமத் பாகவதத்தின் லட்சியமாகும்.

-வித்யா ராஜா