பணமோசடி வழக்கு: தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

 

பணமோசடி வழக்கு: தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

பண மோசடி வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு மதுரை நீதிமன்றக்கிளை நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த துளசி மணிகண்டன் என்பவரிடம் நீதிமணி மற்றும் ஆனந்தன் ஆகிய 2 பேரும் பணம் வாங்கி நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். தன்னிடம் பணத்தை வாங்கி விட்டு மோசடி செய்ததாக, துளசி மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு பணம் கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஞானவேல்ராஜாவை ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி முன்ஜாமீன் கேட்டு ஞானவேல்ராஜா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

பணமோசடி வழக்கு: தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

கடந்த 2 முறை அந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஞானவேல்ராஜா நேரில் ஆஜராகாததால் அவரை கைது செய்வதற்கான இடைக்கால தடை நீடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஞானவேல்ராஜாவின் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. இந்த முறை அவர் நேரில் ஆஜரானதாக கூறப்படுகிறது.

வழக்கு விசாரணையின் போது, நீதிமணி என்பவர் மீதான மோசடி புகாரில் தவறுதலாக தான் தொடர்பு படுத்தப்பட்டதாக ஞானவேல்ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், காவல்துறை விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்து அவருக்கு முன்ஜாமீன் கொடுத்துள்ளனர்.