ஆட்டோ மீது கார் மோதி விபத்து- பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பலி!
தேனி
போடி அருகே ஆட்டோவும், சொகுசு காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பள்ளி மாணவர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் போடி புதூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் முந்தல் பகுதிக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் போடிக்கு திரும்பி கொண்டிருந்தார். அவருடன் பக்கத்து வீட்டை சேர்ந்த லோகேஷ்வரன் (12) என்ற பள்ளி மாணவரும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
போடி அருகே ஆண்டி ஓடை பகுதியில் வந்தபோது ஆட்டோ மீது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த சொகுசு கார் மோதியது. இந்த விபத்தில் அரவிந்த் மற்றும் லோகேஷ்வரன் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த குரங்கணி போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சென்னையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.