இந்த விலங்குகளுக்கு உணவு அளித்தால் கிரக தோஷங்கள் நீங்குமாம்!

 

இந்த விலங்குகளுக்கு உணவு அளித்தால் கிரக தோஷங்கள் நீங்குமாம்!

நம்முடைய இந்து பண்பாட்டில் தேவைப்படுபவர்களுக்கு உணவு வழங்குவது என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. திருவிழாக்கள் என்றால் அன்னதானம் இன்றி விழாக்கள் நிறைவு பெறாது. மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உணவு வழங்குவது மிகவும் முக்கியமானதாக நம்முடைய பண்பாட்டில் பார்க்கப்படுகிறது.

இந்த விலங்குகளுக்கு உணவு அளித்தால் கிரக தோஷங்கள் நீங்குமாம்!

இந்து மதத்துடன் விலங்குகள் மிகவும் நெருக்கமானவை. யானை விநாயகராகப் பார்க்கப்படுகிறது. பசு தெய்வமாக வழிபடப்படுகிறது. பெருமாளின் வாகனமான கருடன், படுக்கையான ஆதிசேஷன் பாம்பு என எல்லா கடவுள்களும் விலங்குகளுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். பசுக்களுக்கு அகத்திக்கீரை, பழங்கள் கொடுப்பது காமதேனுவுக்கு கொடுப்பது போன்று கருதப்படும். சில விலங்குகளுக்கும் நாம் அளிக்கும் உணவு, நம்மை பிடித்த தோஷங்களை நீக்கும் என்று கூறுகின்றன நம்முடைய வேதங்கள்.

செல்வத்தை அளிக்கக் கூடிய கிரகம் சுக்கிரன். புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக வழங்கி வந்தால் சுக்கிர பகவானின் அருளையும் ஆசியையும் பெறலாம்.

ஏழு குதிரைகள் பூட்டிய வாகனத்தில் பயணிப்பவர் சூரியன். ஜாதகத்தில் சூரிய பகவானால் பிரச்னை உள்ளவர்கள் குதிரைக்கு உணவளித்து வர வேண்டும். தொடர்ந்து குதிரைக்கு உணவளித்து வந்தால் சூரிய பகவானால் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.

சந்திர பகவான் பார்வை இருப்பவர்கள் நீர் நிலையில் வாழும் உயிரினங்களுக்கு உணவு வழங்க வேண்டும். ஏரி, குளம், கடலில் வாழும் மீன், ஆமை போன்ற விலங்குகளுக்கு உணவிடுவது சந்திரனின் உக்கிரத்தைக் குறைக்கும்.

புதன் திசை பிரச்னை உள்ளவர்களுக்கு கிளிகளுக்கு உணவு வழங்க வேண்டும். வேப்பமரங்களுக்கு கிளிகள் அதிக அளவில் வரும். அப்போது அதற்கு உணவு வழங்கலாம். முடியாதவர்கள் பறவைகளுக்கு உணவு அளித்து வந்தால் கூட போதும்.

செவ்வாய்க் கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செம்மறி ஆட்டுக்கு உணவு வழங்க வேண்டும். அதே போன்று குரங்குகளுக்கும் உணவு வழங்கலாம். இப்படி செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் குறையும்.

குரு பகவானால் பிரச்னை இருந்தால் கல்வி மற்றும் திருமணம் பாதிக்கப்படும். இதை சரி செய்ய மாடு அல்லது யானைக்கு உணவு வழங்கி வர வேண்டும்.

ராகு – கேதுவால் பாதிப்பு உள்ளவர்கள் நாய்க்கு உணவு வழங்க வேண்டும். மேலும் எறும்புக்குச் சர்க்கரை, அரிசி மாவை வழங்கி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

நம்மை ஆட்டிப் படைக்கும் சனீஸ்வரனின் அருளைப் பெற காகம், எருமை, கருப்பு நிற நாய் உள்ளிட்ட கருப்பு நிற பறவை, விலங்குகளுக்கு உணவு வழங்க வேண்டும்.