விவசாயிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துங்க…. மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை
டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் எல்லை பகுதிகளில் அமைந்துள்ள சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அதேசமயம் தங்களது கோரிக்கைகளை ஏற்காதவரை போராட்டத்தை கைவிடும் எண்ணத்தில் விவசாயிகள் இல்லை. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை விதித்ததால் அதனை விவசாயிகள் ஏற்க மறுத்து விட்டனர்.
இந்த சூழ்நிலையில், விவசாயிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தும்படி மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், மத்திய அரசு உடனடியாக, நிபந்தனையின்றி விவசாயிகளுடன் பேச வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.
டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையும் இருக்கக்கூடாது. பேச்சுவார்த்தை உடனடியாக நடத்தப்பட வேண்டும். அவர்கள் நம் நாட்டின் விவசாயிகள். அவர்கள் விரும்பும் இடத்தில் போராட்டத்தை நடத்த அவர்களை அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.