அருந்ததியர் இட ஒதுக்கீட்டை சட்ட ரீதியாக பெற்றுத்தந்தது எடப்பாடி பழனிசாமி அரசுதான்! – ஆதி தமிழ் மக்கள் கட்சி விளக்கம்
அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க முடியாது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறிய அறிக்கையை தற்போது பலரும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளது போல, உண்மையில் அருந்ததியர் இன மக்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்க சட்டப்படியான நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க அரசுதான் என்று ஆதி தமிழ் மக்கள் கட்சித் தலைவர் எஸ்.டி.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஆதி தமிழ் மக்கள் கட்சித் தலைவர் எஸ்.டி.கல்யாணசுந்தரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்போது தான் உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் வழங்கியுள்ளது. அதற்குள் தமிழக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை பரப்பி வருகிறார்கள். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க அரசாக இருக்கலாம். ஆனால் இந்த இட ஒதுக்கீட்டைக் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பாதுகாத்து நடைமுறைப்படுத்தி வருவது அம்மாவின் அரசு.
கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, ஐ.ஏ.எஸ் அதிகாரி மணிவண்ணன் நானும் செல்வகுமார் போன்றவர்கள் நேரில் சந்தித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சீனியர் வழக்கறிஞரை நியமனம் செய்து சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்திட வேண்டும் என கோரிக்கை வைத்தோம் . தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கனிவோடு பரிசீலனை செய்து சீனியர் வழக்கறிஞரை நியமனம் செய்து உச்சநீதிமன்றத்தில் சட்ட பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தது அனைவரும் அறிந்ததே.
மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு சம்பந்தமாக அதிகாரம் வழங்கினால் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்குவேன் என்று உறுதி அளித்தவர் ஜெயலலிதா. அது நிறைவேறும் காலம் வந்துவிட்டது. இனியும் விமர்சனம் செய்வதைத் தவிர்த்து விட்டு கூடுதல் இட ஒதுக்கீடு பெற அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழைக்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்” என்று கூறியுள்ளார்.