சாலை விபத்தில் ராணுவ வீரர் பலி… திருமணமான ஒரு மாதத்தில் சோகம்!

 

சாலை விபத்தில் ராணுவ வீரர் பலி… திருமணமான ஒரு மாதத்தில் சோகம்!

மதுரை

மதுரை அருகே திருமணமான ஒரு மாதத்தில் ராணுவ வீரர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த வண்டபுலி கிராமத்தை சேர்ந்தவர் இருளப்பசாமி (27). ராணுவத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு, கடந்த மாதம் 16ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், இருளப்பசாமி நேற்று அதே கிராமத்தை சேர்ந்த முத்துக்கண்ணன் என்பவருடன் மதுரைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

சாலை விபத்தில் ராணுவ வீரர் பலி… திருமணமான ஒரு மாதத்தில் சோகம்!

சேடப்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருளப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முத்துக்கண்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த சேடப்பட்டி போலீசார், இருளப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து புகாரின் பேரில் சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே திருமணமான ஒரு மாதத்தில் ராணுவ வீரர் விபத்தில் பலியான சம்பவம் வண்டபுலி கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.