ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த மதியழகன் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – முதல்வர்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த சேலத்தைச் சேர்ந்த மதியழகன், குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் சேலத்தை சேர்ந்த மதியழகன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதியழகன் சேலம்மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தன்னலம் கருதாமல், தியாக உணர்வோடு இந்திய திருநாட்டின் பாதுகாப்புப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, வீர மரணம் அடைந்த அவில்தார் மதியழகன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வீர மரணம் அடைந்த அவில்தார் மதியழகன் அவர்களின் குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். வீரமரணம் அடைந்த அவில்தார் மதியழகன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் படைகளை எதிர்த்து நின்று தாய்நாடு காக்கும் மகத்தான பணியில் இன்னுயிர் ஈந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்-தியாகத் தமிழர் மதியழகனுக்கு வீரவணக்கம். https://t.co/DESvjNQGqf
— M.K.Stalin (@mkstalin) June 5, 2020
இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் படைகளை எதிர்த்து நின்று தாய்நாடு காக்கும் மகத்தான பணியில் இன்னுயிர் ஈந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்-தியாகத் தமிழர் மதியழகனுக்கு வீரவணக்கம்” என பதிவிட்டுள்ளார்.
வீரமரணமடைந்த மதியழகன் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, ரூ20 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.- முதல்வர் எடப்பாடி