நாளை தனிக்கட்சி அறிவிக்கும் அர்ஜுனமூர்த்தி? பின்னணியில் மீண்டும் ரஜினி!

 

நாளை தனிக்கட்சி அறிவிக்கும் அர்ஜுனமூர்த்தி? பின்னணியில் மீண்டும் ரஜினி!

ரஜினிகாந்தின் ஆசிர்வாதத்துடன் விரைவில் மாற்றத்தை நோக்கிய பயணம், புதுக்கட்சியை தொடங்குவேன் என அதிரடியாக அறிவித்திருக்கிறார் அர்ஜூனமூர்த்தி.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன் என்றும் அது குறித்த முக்கிய அறிவிப்பை டிச.31ம் தேதி வெளியிடுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதற்காக கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் ரஜினிகாந்த் நியமித்திருந்தார். இதனால் பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி, பின்னர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் திடீரென உடல்நிலை காரணமாக, கட்சி தொடங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் இறுதியில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும் ரஜினியின் நண்பரும் ஆதரவாளருமான அர்ஜூன மூர்த்தி, எந்தச் சூழ்நிலையிலும் எனக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அரசியலில் இல்லையென்றாலும், எனக்குத் தலைவர் என்பதையும் தாண்டி நான் அவரது ரசிகனாக என்றுமே இருப்பேன் என அர்ஜூன மூர்த்தி கூறியிருந்தார்.

நாளை தனிக்கட்சி அறிவிக்கும் அர்ஜுனமூர்த்தி? பின்னணியில் மீண்டும் ரஜினி!

இந்நிலையில் அர்ஜுனமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “மாற்றத்தின் பயணம் விரைவில்…” எனக்குறிப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை நமது நாட்டுக்கு அறிமுகம் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்தநிலையில், நமது தலைவருக்கு உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கூறிய ஆலோசனையின் காரணமாக, அவர் அரசியலில் ஈடுபட முடியாமல் போனதும் நாமறிந்த ஒன்று. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் வேதனை அடைந்தேன். இதற்கு ஈடுசெய்யும் வகையில் ரஜினிகாந்தின் நீண்டகால அரசியல் மாற்றத்தின் நினைவானது நிச்சயமாக நிகழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து, நமது தமிழகத்தில் `அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம், இப்ப இல்லன்னா எப்போது…’ என்று சொன்ன ரஜினிகாந்தின் நல்ல எண்ணம், நல்ல மனது நம் தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள்.

தற்போது தலைவர் ஒரு நடிகராக, அவரது தொழில் தர்மத்தின் காரணமாக, அவரது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் வரக் கூடாது என்ற காரணத்தால் அவரது பெயர், புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்று நான் விரும்புகிறேன். எனவே, என்னை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்பி நாட்டுக்கு அறிமுகம் செய்த அவர்களின் பாதம் தொட்டு வணங்கி, நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தைத் தருவேன் என்று நம்புகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் எனக்குத் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். அரசியலில் இல்லையென்றாலும், எனக்குத் தலைவர் என்பதையும் தாண்டி, நான் ஒரு ரசிகன் என்பதில் பெருமைகொள்கிறேன். அந்த அக்கறையில் அவரது புகழுக்கு எந்த இடத்திலும் கெட்டபெயரை நாம் ஏற்படுத்த மாட்டோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஆசீர்வாதம் மட்டும் போதும், அவர்களின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். மிக்க நன்றி. விரைவில் மாற்றத்தின் சேவகனாக உங்கள் முன்…” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நாளை தனிக்கட்சி அறிவிக்கும் அர்ஜுனமூர்த்தி? பின்னணியில் மீண்டும் ரஜினி!

பாஜகவில் இருந்தபோது தமிழைசைக்கு பின் மாநில தலைவர் பதவியை கேட்டு அர்ஜூன மூர்த்தி அடம்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. அர்ஜூன மூர்த்திக்கு ஒரு கட்சியின் தலைமை பதவி மீது ஆரம்பத்திலிருந்தே ஒரு மோகம் இருந்துள்ளது. அதுவே கட்சியை தொடங்கவேண்டும் என்ற ஒரு வெறியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரஜினி ரசிகர்கள் மற்ற கட்சிக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர், அவர்களை தம் பக்கம் இழுக்க இந்த ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக நாளை செய்தியாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வமான கட்சி அறிவிப்பை வெளியிடவிருக்கிறார் அர்ஜூன மூர்த்தி. இவரை இயக்குவது பாஜகவா? அல்லது ரஜினியா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. உடல்நிலையை சுட்டிக்காட்டி தமிழக அரசியலிலிருந்து நேரடியாக விலகிய ரஜினி, மறைமுகமாக அரசியலுக்குள் கெஸ்ட் ரோல் கொடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.