வரும் 2ஆம் தேதி சட்டமன்றத்தில் கலைஞர் உருவப்படம் திறப்பு- சபாநாயகர்
வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தை இந்திய குடியரசுத் தலைவர் பேரவை மண்டபத்தில் திறந்துவைக்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை சபாநாயகர், “தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திரு உருவப்படம் திறப்பு விழா நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் திறந்து வைக்க உள்ளார்.
சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்கு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” எனக் கூறினார்.