கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.23,380 பறிமுதல்
Oct 13, 2020, 11:21 IST1602568269000
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 23 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கும்பகோணம் மாவட்ட பதிவாளர் அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக தஞ்சை மாவட்ட ஊழல்
தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து, ஊழல் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி மனோகரன் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படையினர் மாறுவேடத்தில் அங்கு சென்று, அதிரடி சோதனையில் இறங்கினர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத 23 ஆயிரத்தி 380 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து இணை சார்பதிவாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.